Wednesday, 30 July 2014

மழை -படித்ததில் பிடித்தது


                                                          


என் முதல் காதல்

அவளோடு ….



யார் அவள்?



நானும் அறியேன்.


பெயர்?


சில வருடங்களுக்கு முன்பு தான் எனக்குத் தெரிந்தது .


ஊர்?


எங்கு வேண்டுமானாலும் இருப்பாளாம்.


அவளைப் பற்றி?


நிச்சயமாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவள் தான்.


எப்படி அறிமுகமானாள் ?


மின்னல் ஒளியில் அவள் தெரிந்தாள் – என்


மனதை உடன் பறித்தாள்.


பார்ப்பதற்கு ?



தண்ணீர் முகம்


கூரிய முக்கு


அரை குறை உயரம்


அழகிய உதடு



உதடு கொண்டு என் தாகம் தீர்ப்பாள்

என் உள்ளத்தில் என்றும் அவள் வாழ்வாள்.



எவ்வளவு நாள் காதல்?


விவரம் தெரியும் முன்பிலிருந்தே.


உன் காதல் பரிசு?

முத்தம்.


அவள் பரிசு?

பதில் முத்தம்.



கைப்பேசி காதல்?


ஊரில் வசதி இல்லை.


பிறகு பேசிக்கொள்வது?

எப்போதாவதுதான்.



விளையாடுவீர்களா?

காகிதக் கப்பல் விடுவதுண்டு.



சத்தமிடுவாளா?

எக்கச்சக்கமாக.


கோபப்படுவாளா?

ம் ….. ம் …..



கோபப்படும் போது – சில சமயம்

கொலையும் செய்வாள்.


அது …. ? இது …..?

சீ …… சீ ….



அப்படியொன்றும் இல்லை.

அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று

நான் புனிதம் காக்கிறேன்.


அவளை விட்டுப் பிரியும் பொழுது?

நான் படுத்துக் கொள்வேன் உடல்நிலை சரியில்லாமல் .




யாருக்கேனும் அவளைப் பிடிக்குமா?

குழந்தைகளுக்கு அவளைப் பிடிக்கும்

எனக்கும் தான்;



பெரியோர்களுக்கு அவள் கசக்கும்

என் பெற்றோருக்கும் தான்.


மாமனார் மாமியார் பார்த்ததுண்டா?
தூரத்திலிருந்து.


அவள் பார்த்ததுண்டா?

என்னைச் சந்திக்க வரும்பொழுது….



என்ன அவள் வருவதைப் பார்த்தால்
இவர்கள் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.



அவளைப் பற்றி கவிதை எழுதியதுண்டா?
அவள் ஒரு கவிதை



அவளைப் பற்றி எழுதாதவன் கவிஞனில்லை.
அவளைப் பார்க்க வேண்டுமே?



ஜன்னல் திறந்து வையுங்கள் – உங்கள்
வாசல் வழி நடந்து போகலாம்.


எப்போது திருமணம்?
பொறுங்கள், மகனைக் கேட்டு சொல்கிறேன்.



மகனா?
இப்பொழுது அவன் தானே அவளைக் காதலிக்கிறான்.


என்ன?


அட, மழையைக் காதலிக்காத மழலை உண்டா?



நானும் காதலித்தேன் அவளை – என்


மழலைப் பருவத்தில்.

Wednesday, 16 July 2014

விடைபெறுகிறேன் !-படித்ததில் பிடித்தது






இன்று உனக்கும் எனக்கும் விவாகரத்து

நான் மட்டும் கண்ணீரோடு...
நீ என்றுமே பெருமிதத்தோடு.

வந்தேன். வசந்த நாளில் - உன்
வாசல் தேடி....
வாரி அணைத்து
வரவேற்பு செய்தாய்
விவாகரத்து விரைவில் என்று சொல்லாமலே !!

உன்னால் தானடி - என்
பெற்றோரை பிரிந்தேன்
உன்னால் தானடி - என்
உறவுகள் மறந்தேன்
உன்னால் தானடி - என்
கனவுகள் மலர்ந்தேன்
உன்னைத் தானடி
உண்மை சொல்லேன்?

திருமணத்தன்றே தப்பிக்கலாம் - என்று
நினைத்தேன்
உன் அழகால் என்னை
அடைத்து விட்டாயடி - என் நினைவை அன்றே
அழித்து விட்டாயடி

முதல் இரவு
உன்னுடன் உறங்காமலே ...
சில இரவு
உன்னோடு பேசாமலே...
பல இரவு
உன்னோட பாசத்திலே...

உறவுகள் பல தந்தாய்
உணர்வுகள் பல தந்தாய்
உரிமைகள் பல தந்தாய் - இன்று
"உதறிவிட்டு செல்" என்கிறாய் .

நான் ஆணென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்;
நான் நானென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்.

காதலைக் கற்று தந்தாய்
கவிதைகள் கற்று தந்தாய்
கல்வியைக் கற்று தந்தாய்
கலையையும் கற்று தந்தாய்
கடைசியில் ஏனடி கழட்டிவிட்டு செல்கிறாய்?

உன்னைச் சேர்ந்த ஒவ்வொரு நாளும்
உதிரம் உலையாய் கொதித்ததடி - இனி
உன்னைப் பிரியும் ஒவ்வொரு நாளும்
உதிரம் பணியை உறையுமடி

அப்படி என்னடி செய்துவிட்டேன் - படித்தேன்
உன்னைப் படித்தேன்
படிப்புக்கு தண்டனை பிரிவா?

முதல் முத்தம் தந்து என்னை நீ அழைத்தாய் - இதோ
இறுதி முத்தம் தந்து உன்னை நான் அழைக்கிறேன்
வந்துவிடு என் வாசல்தேடி
வரமாட்டாய் - நீ நிச்சயம்
வரமாட்டாய்
ஈழத்தைக் காக்க இந்தியன் வருவானா?

விடைபெறுகிறேன்...
உன் குழந்தையோடு - இல்லை இல்லை
நம் குழந்தையோடு.

ஏய்! கல்நெஞ்சக்காரி , இப்பொழுதாவது கூறடி
யாரடி வைத்தது - உனக்கு
"கல்லூரி" என்ற பெயரை....!!!